றோயல் பார்க் கொலைக் குற்றவாளிக்குப் பொதுமன்னிப்பு வழங்கியமை தொடர்பாக விளக்கமளிக்க, உயர்நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமன்னிப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கில் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெயரிடப்பட்ட நிலையிலேயே இன்று செவ்வாய்க்கிழமை இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் அவர் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்.
இதேவேளை, றோயல் பார்க் கொலைக் குற்றவாளி ஜூட் ஷிரமந்த அன்டனி ஜயமஹவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடை எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி வரை உயர்நீதிமன்றத்தால் இன்று நீடிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அவர் நவம்பர் 15ஆம் திகதியே விசேட கடவுச்சீட்டைப் பெற்றுக்கொண்டு நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார் என உயர்நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் தெரிவித்தார்.
இதேவேளை, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, அவர் தற்போது சிங்கப்பூரில் வசித்து வருகின்றார் எனவும் அவர் கூறினார்.